by Bella Dalima 21-12-2018 | 4:06 PM
செக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயுக் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
செக் குடியரசின் தலைநகர் பிராகாவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள கார்வினா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.
இந்த சுரங்கத்தில் நேற்று (20) வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் அடியில் சுமார் 800 மீட்டர் ஆழத்தில் சில தொழிலாளர்கள் பாறைகளை பிளந்து நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.
பிற்பகல் வேளையில் அங்கு பாறைகளில் இருந்து மீத்தேன் வாயு கசிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் மீத்தேன் எரிவாயு தீப்பற்றி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.