மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது

by Staff Writer 19-12-2018 | 7:17 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில், மலையக இளைஞர்கள் இருவர் ஆரம்பித்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. தன்னெழுச்சி மலையக இளைஞர்கள் இருவர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முற்பகல் முதல் இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என குறித்த இளைஞர்கள் குறிப்பிட்டனர்.