துருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2000 பேருக்கு ஆயுள் தண்டனை

by Bella Dalima 19-12-2018 | 4:56 PM
துருக்கியில் 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட 2000 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. துருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகனுக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டில் திடீர் இராணுவப் புரட்சி ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன் முறியடித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று (18) இந்த வழக்கின் தீர்ப்பு வௌியிடப்பட்டது. அதில் 2000 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.