by Staff Writer 19-12-2018 | 3:45 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜையின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையெனவும் இதன்போது கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
இதற்கிணங்க வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.