டெல்லியில் 3 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

நிர்பயா கொலை செய்யப்பட்ட அதே தினத்தில் டெல்லியில் 3 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

by Bella Dalima 18-12-2018 | 4:51 PM
டெல்லியில் பேருந்தில் இளம்பெண் நிர்பயா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அதே தினத்தில் 3 வயது சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியின் வீடு உள்ள கட்டடத்தின் பாதுகாவலர் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். சுய நினைவு இழந்திருந்த சிறுமியை மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி - பின்டாபூரில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அக்குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிந்ததும், அருகில் வசிக்கும் மக்கள் ஒன்றுகூடி குற்றம்சாட்டப்பட்ட நபரைத் தாக்கியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்த பிறகே குற்றம்சாட்டப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தினக்கூலி வேலை செய்பவர்கள். சம்பவம் நடந்தபோது அவர்கள் வீட்டில் இல்லை. வீட்டிற்கு வெளியே இருந்த குழந்தைக்கு இனிப்புகள் கொடுத்து ஆசை காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் தூக்கிச்சென்றுள்ளார். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காப்பதற்கான (போக்ஸோ) சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை கிடைக்கும்.