அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 18-12-2018 | 3:25 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இரண்டு சந்தேகநபர்களின் விளக்கமறியல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டது. மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது முறையற்ற விதத்தில் பணம் ஈட்டியமை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளார்.