05வது தடவையாகவும் பிரதமர் அரியணையில் மீண்டும் ரணில்

by Staff Writer 16-12-2018 | 11:56 AM

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமராக 05வது தடவையாகவும் மீண்டும் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பதவிப்பிரமான நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் கோஷங்கைள எழுப்பி,தமது மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியிருந்தனர். கடந்த ஒக்ேடாபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ நேற்று பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து, இன்றைய பதவிப்பிரணமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. சட்டத்தரணியான ரணில் விக்ரமசிங்க 1977 ஆம் ஆண்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். ரணில் விக்ரமசிங்க பிரதி அமைச்சராக, அமைச்சராக,சபாநாயகராக மற்றும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது அவரினால் இரண்டு தேர்தல்களில் மாத்திரமே வெற்றிபெற முடிந்தது. 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் 2002 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பூரண ஆதரவுடன் சரத் பொன்சேக்கா பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக தமது கட்சியை வழிநடாத்திய அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியான ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவராக 20 வருடங்கள் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் பிரதமர் பதவியை வகித்து வந்த நிலையில் , கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டார்.    

ஏனைய செய்திகள்