கொழும்பில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

கொழும்பில் விசேட பொலிஸ் பாதுகாப்பு

by Staff Writer 15-12-2018 | 3:53 PM
Colombo (News 1st) நாட்டில் அமைதியை பேணிப்பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், நடமாடும் பாதுகாப்பு சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். தேவையான சந்தர்ப்பங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கும் பொலிஸார் தயார் நிலையிலுள்ளனர். இதனைத் தவிர, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மாத்திரம் 2000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். சிவில் உடைகளிலும் பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். நகரங்களில் , சனநெரிசல் மிக்க பகுதிகளில் நடமாடும் போது தங்காபரணங்கள் மற்றும் பணம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன், இன்று முதல் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யுமாறு போக்குவரத்து பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.