பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

by Bella Dalima 13-12-2018 | 5:08 PM
Colombo (News 1st) ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது. நான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வௌியிட்டமை அடிப்படை உரிமை மீறல் எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பம் மாதம் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியல் அமைப்புக்கு முரணானது என வலியுறுத்தி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் 13 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட ஐவர் முழுமையான நீதியரசர்கள் குழாமை பெயரிடுமாறு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்ததுடன், இதன் பிரகாரம் பிரதம நீதியரசர் நலின் பெரேரா குறித்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தாம் உள்ளடங்கலாக ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமை நியமித்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தி கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. எனினும், கடந்த 7 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம் இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத் தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உத்தரவிட்டது. பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது. நீதியரசர்கள் குழாமில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர்.  

ஏனைய செய்திகள்