நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்றார் தெரசா மே

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றார் தெரசா மே

by Bella Dalima 13-12-2018 | 4:51 PM
பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் தெரசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார். இந்த செயற்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சிலரும் எதிர்க்கட்சியினரும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இது தொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தன. இந்நிலையில், பாராளுமன்றத்தில் தெரசா மேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று (12) கொண்டுவரப்பட்டது. பின்னர், தீர்மானத்தின் மீது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் உள்ள 317 பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கட்சி தலைவர் பதவியில் நீடிப்பார்.