மீண்டும் தெலுங்கானா முதல்வரானார்  சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதல்வராக மீண்டும் சந்திரசேகர ராவ் பதவியேற்பு

by Bella Dalima 13-12-2018 | 4:37 PM
Colombo (News 1st) தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். தெலுங்கானாவில் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடங்கியது. புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக பதவியை இராஜினாமா செய்தார் சந்திரசேகர ராவ். இராஜினாமாக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள TRS கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரசேகர ராவ் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து, இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. தெலுங்கானா மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சந்திரசேகர ராவ். அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் இரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.