விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவு

விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு பிரித்தானியா உத்தரவு

by Staff Writer 10-12-2018 | 7:29 PM
விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு, பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் தம் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய விமான நிறுவனம் ஒன்றின் தலைவராகிய விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு பிரித்தானிய நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. தமக்குச் செலுத்தவேண்டிய கடன்தொகையை விஜய் மல்லையா மீளச் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்து பல வங்கிகள் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், அவர் 2016 ஆம் ஆண்டில் லண்டனுக்குத் தப்பிச்சென்றிருந்தார். அங்கு வைத்து கைது செய்யப்பட்ட அவர், பிணையில் வௌிவந்திருந்த நிலையில், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், நட்டத்தில் இயங்கிய தமது விமான நிறுவனத்துக்காக இந்திய வங்கிகளில் பெற்ற 9,000 கோடிகளை திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையிலுள்ள அவர், தமது கடன்களை முழுமையாகச் செலுத்துவதாக முன்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை, பிரித்தானிய நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யக்கூடும் என இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.