வர்த்தக அமைப்புகளை சந்திக்கும் பிரெஞ்ச் ஜனாதிபதி

பிரான்ஸில் தொடரும் எதிர்ப்புப் போராட்டம்: வர்த்தக அமைப்புகளை சந்திக்கும் ஜனாதிபதி

by Staff Writer 10-12-2018 | 4:14 PM
பிரான்ஸில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களைத் தணிக்கும் நோக்கில் வர்த்தக அமைப்புக்களையும் தொழிலாளர் ஒழுங்கமைப்புகளையும் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் சந்திக்கவுள்ளார். இதனிடையே, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தொலைக்காட்சி உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது அவர் அறிவித்தல் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 4 வார கால இறுதியில் தொடர்ச்சியான வன்முறைப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,36,000க்கும் அதிகமான மஞ்சள் சட்டைப் போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்தியதுடன், அவர்களில் 1,700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தலைநகர் பாரிஸில் சுமார் 10,000 பேர் பங்கேற்ற போராட்டத்தின்போது, கார்கள் எரிக்கப்பட்டதோடு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தநிலையில், இது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்கு பேரழிவு என பிரெஞ்ச் நிதி அமைச்சர் புருனோ லி மெய்ரே தெரிவித்துள்ளார்.