மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் கைது

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 10-12-2018 | 2:35 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்குத் தேவையான ஒரு இலட்சம் பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலத்தில், மேலதிகமாக 1,000 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வீதியின் இருமருங்கிலும் வாகனத்தை நிறுத்திவைப்பதைத் தவிர்க்குமாறும் சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வாறு நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்கள் நிறுத்திவைக்கபடும் பட்சத்தில், அதனை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, வாகனத்தின் சாரதிக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.