by Staff Writer 09-12-2018 | 7:16 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை தொடர்பில், நாளாந்தம் 3 அல்லது 4 முறைப்பாடுகள் கிடைப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகள் குறித்து பரிசீலிப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித கூறியுள்ளார்.
பரீட்சை தொடர்பில் இதுவரை 50 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அடையாளங் காணப்பட்டுள்ள 3,000க்கும் மேற்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பரீட்சையில் தோற்றிய மாணவர் மற்றும் அவருக்கு உதவிய ஆசிரியர் மீது விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் கல்வி அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவருக்கு உதவிய ஆசிரியரை வரவழைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நியூஸ்பெஸ்ட்டிற்கு கூறினார்.