கல்கிஸ்ஸ, இரத்மலானை வாகன விபத்துகளில் மூவர் பலி

கல்கிஸ்ஸ, இரத்மலானை வாகன விபத்துகளில் மூவர் பலி

by Staff Writer 09-12-2018 | 7:10 AM
Colombo (News 1st) கல்கிஸ்ஸ மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், விபத்துகளில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், இரண்டு கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்களும் எதிர்த்திசையில் பயணித்த வாகனங்களுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்தனர். இதேவேளை, கல்கிஸ்ஸ நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்தனர். விபத்துகளில் உயிரிழந்தோரும் காயமடைந்தவர்களும் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்