விஜயகுமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வனிதா

நடிகர் விஜயகுமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வனிதா கைதாகி விடுதலை

by Bella Dalima 08-12-2018 | 4:52 PM
நடிகர் விஜயகுமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக நடிகை வனிதா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை அவரது மகள் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தினார். குறிப்பிட்ட கால படப்பிடிப்புக்கு பின்னரும் அவர் அந்த வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கினார். இதுகுறித்து விஜயகுமார் மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை வெளியேற்றினர். அப்போது, வனிதாவின் நண்பர்கள் தகராறு செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வனிதாவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வீட்டிற்குள் நுழைய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறி நடிகை வனிதா தனது வழக்கறிஞர்களுடன் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்தார். இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் மதுரவாயல் பொலிஸ் நிலையத்தில் மீண்டும் முறைப்பாடு செய்தார். அதில், ‘‘நீதிமன்ற உத்தரவு என கூறி மகள் வனிதா அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் சேதப்படுத்தி உள்ளார். எனவே அவரை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று (07) வனிதாவை பொலிஸார் வீட்டை விட்டு வெளியேற்றி விஜயகுமாரின் வீட்டைப் பூட்டினர். பின்னர் வனிதா மீது அத்துமீறி நுழைதல், சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை, பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்று, பின்னர் பிணையில் விடுவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி நடிகை வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார்.