ஸ்ரீ.சு.க., ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைவில் கூட்டமைப்பு

by Staff Writer 08-12-2018 | 7:28 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ​ஜனாதிபதியின் உத்தி​யோகபூர்வ வாசஸ்தத்தில் இரவு 7 மணியளவில் கூடியது. முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இதன்போது தெரிவித்திருந்தார். மேலும், இதன்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, கேள்வி - மொட்டு பலமடைந்துள்ளதல்லவா? சுதந்திரக் கட்சியை காப்பாற்ற முடியுமா? பதில் - எவ்வளவு முயற்சித்தாலும், சுதந்திரக் கட்சியை அழிக்க முடியாது. கேள்வி - உங்களுக்கு, மொட்டு சவால் இல்லையா? பதில் - சவால் இல்லை. இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுக் கூட்டமைப்பை உருவாக்கி, தற்போதைய பிரதமர் அதன் தலைவர் என்ற வகையில், மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் நாம் இந்தப் பயணத்தை ஆரம்பிப்போம். பொது நோக்கத்திற்காக அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். எதிர்வரும் தேர்தலுக்குத் தயார். பொது எதிரி ஐக்கிய தேசியக் கட்சி என நாம் நினைக்கிறோம் என பதிலளித்துள்ளார். அதேநேரம்,
பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் தீர்மானம், அவ்வாறே அனுமதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நாம் தேர்தலுக்குத் தயாராகிறோம். பொதுக் கூட்டமைப்பு என்ற வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அந்தக் கூட்டமைப்பிற்குள் காணப்படும். மாவட்ட அமைப்பாளர் பதவிகளை இரத்து செய்து, எமது கட்சியின் புதிய அமைப்பாளர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகும்போது நியமிப்பது என ஜனாதிபதி தீர்மானித்தார்.
கேள்வி - மொட்டில் உறுப்புரிமை பெற்றவர்களுக்கு ஏதேனும் தடை விதிக்கப்பட்டுள்ளதா? பதில் - தடை செய்வதற்கு எதுவுமில்லை. மொட்டில் உறுப்புரிமை பெற்றால், சுதந்திரக் கட்சியிலிருந்தும் நீங்குவர். கேள்வி - நீங்கள் மொட்டில் உறுப்புரிமை பெறுவீர்களா? பதில் - எடுக்க வேண்டுமல்லவா. எமக்கு இரண்டும் ஒன்றுதான் என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம கருத்து வௌியிட்டிருந்தார்.