பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 08-12-2018 | 7:43 PM
Colombo (News 1st) நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 1000 ரூபா சம்பளம் கோரி யட்டியந்தோட்டை - பூனுகல தோட்ட தேயிலை தொழிற்சாலை முன்றலில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யட்டியந்தோட்டை - சீபொத் பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வீஓயா, பூனுகல, ஹல்கொல்ல, மனல்பொல ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, தெனியாய தோட்ட மக்கள் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். எனினும், மாத்தளை - மில்லவான - லூல்கொட, நடுத்தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.