பேருவளை போதைப்பொருள் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பிச்சென்ற கடத்தல்காரருக்கு தொடர்பு

by Staff Writer 07-12-2018 | 8:17 PM
Colombo (News 1st) பேருவளை மற்றும் பலப்பிட்டியவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலானது நாட்டிலிருந்து தப்பிச்சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. அவர்களை கைது செய்ய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்தது. ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கடலில் அதனைக் கையளித்த ட்ரோலர் படகு ஒன்றையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 231.54 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (05) இரவு கைது செய்யப்பட்டனர். அதன் பெறுமதி 2278 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.