நீதிமன்றில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 07-12-2018 | 7:49 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிவித்தலின் பிரதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புபட்ட விவாதத்தின் இறுவெட்டின் பிரதி என்பனவற்றை ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சட்ட மா அதிபருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று பதிவாளருக்கு உத்தரவிட்டது. ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்ததுடன், ஊடகம் மூலம் அறிந்துகொண்ட விடயங்களுக்கு ஏற்ப நீதிமன்றத்தில் ஆஜரானதாக அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா குறிப்பிட்டார். நீதிமன்றம் வௌியிட்டதாகக் கூறப்படுகின்ற அறிவித்தலின் பிரதி இதுவரை தமது தரப்பினருக்கு கிடைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். ஈவா வனசுந்தர, எல்.டீ.பி.தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.