Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
ஊழல் ஒழிப்பு செயலணியின் படையணி நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார, பிரமுகர்கள் சிலரை கொலை செய்வதற்கான சதி தொடர்பில் கடந்த வாரம் தகவல்களை வௌியிட்டிருந்தார்.
ரிஷாட் பதியுதீனையும் கொலை செய்வதற்கு திட்டம் இருந்ததாக அவர் வௌியிட்ட தகவலுக்கமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் இன்று ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, ரிஷாட் பதியுதீன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
எனக்கு இவ்வாறு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்று தெரிந்த பின்னரும் எனக்கிருந்த பாதுகாப்பு அனைத்தும் நீக்கப்பட்டு எனக்கெதிராக சதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமாதானமாக வாழ்வதை விரும்பாதவர்கள் இவ்வாறான செய்தி ஒன்று வந்தவுடனே என்னுடைய அனைத்து பாதுகாப்பையும் அகற்றி விட்டனர். இது தொடர்பில் நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறோம்.