பொலிஸார் கொலை: 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொலை: 30 பேரிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 05-12-2018 | 5:15 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இந்த கொலைகளுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் இரண்டு துப்பாக்கிகளும் காணாமற்போயுள்ளன. அவை இரண்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் தலைகளிலும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.