மஹிந்த ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு விசாரணைக்கு திகதி அறிவிக்கப்படவில்லை

by Staff Writer 05-12-2018 | 8:34 PM
Colombo (News 1st) பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவிற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் நேற்று (04) பிற்பகல் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்வதற்கு இதுவரையில் திகதி குறிப்பிடப்படவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும், இந்த தீர்ப்பினூடாக நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் எனவும் மனுதாரரான மஹிந்த ராஜபக்ஸ தனது மேன்முறையீட்டு மனுவினூடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 5 மற்றும் 6 ஆம் திகதிகளைத் தாம் கோரியதாகவும் அதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், மீண்டுமொரு நாளை கோருமாறு பிரதம நீதியரசர் உத்தரவிட்டதாகவும் அதற்கமைய நாளைய தினத்தை (06) கோரிய போதிலும், வழக்கு நாளை விசாரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த குறிப்பிட்டார்.