பிரெக்ஸிட் உடன்படிக்கை 3 தடவைகள் தோற்கடிப்பு

பிரெக்ஸிட் உடன்படிக்கை 3 தடவைகள் தோற்கடிப்பு: பிரதமர் வருத்தம்

by Chandrasekaram Chandravadani 05-12-2018 | 8:48 AM
பிரெக்ஸிட் உடன்படிக்கை பிரித்தானிய கீழ்சபையில் 3 தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு பிரதமர் தெரேசா மே வருத்தமடைந்துள்ளார். அத்துடன், பிரெக்ஸிட் உடன்படிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் முழு சட்ட ஆலோசனையையும் அச்சிடுவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதேநேரம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) பிரெக்ஸிட் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன நேரும் என்பதையும் அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கீழ்சபைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், 2016 பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மற்றும் உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிக்கத்தக்க அர்ப்பணிப்பொன்றை செய்ய வேண்டுமென பிரதமர் தெரேசா ​மே குறிப்பிட்டுள்ளார். முன்மொழியப்பட்டுள்ள பிரெக்ஸிட் உடன்படிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு தொடர்பிலான 5 நாட்கள் கொண்ட விவாதத்தின் ஆரம்பத்தில் கீழ்சபையில் நேற்று உரையாற்றிய தெரேசா மே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனினும், உடன்படிக்கை அமுலுக்கு வர, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதி அவசியமானதாகும். இந்நிலையில், பிரெக்ஸிட் உடன்படிக்கையை ஏற்பதா நிராகரிப்பதா என்பது தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முக்கிய தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.