கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்தும் இயலுமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை: ஜனாதிபதி

by Staff Writer 05-12-2018 | 5:29 PM
Colombo (News 1st) கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான இயலுமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உள்ள ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு முன்னோக்கி செல்வதற்கு சந்தர்ப்பமளிப்பதில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் ரணில் விக்ரமசிங்க, முதலில் தமது கட்சிக்குள் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அதிகாரிகள் சிலருடன் இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான சேவைகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நிதியாண்டிற்காக ஒதுக்கியுள்ள அனைத்து நிதியையும் உரிய முறையில் செலவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.