ஊடக அமைச்சின் செயலாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரிடம் விளக்கம் கோரினார் சபாநாயகர்

by Staff Writer 05-12-2018 | 9:14 PM
Colombo (News 1st) ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கமைய இன்று பிற்பகல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டிஆரச்சி மற்றும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திசாநாயக்க ஆகியோர் சபாநாயகர் முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அரசியல் நெருக்கடி நிலவுவதால் சுயாதீனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது. இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அரச ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்குவதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் இதன்போது அறிவித்துள்ளார். சபை நடவடிக்கைகளை ஒலிபரப்புவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பணம் பெற்றுக்கொண்டுள்ள போதும் பல நாட்களாக அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார்.