வவுணதீவில் பொலிஸார் கொலை: கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

by Staff Writer 04-12-2018 | 7:37 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஏற்பாட்டில் கிளிநொச்சி - கனகபுரம் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி பொதுச்சந்தை வரை பயணித்ததுடன், அங்கு ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக முன்றலில் மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இதனை ஏற்பாடு செய்திருந்தன. வவுணதீவு சம்பவம் தொடர்பில் உண்மையான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தனவிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.