தேர்தல் வேண்டுமாயின் சட்டப்பூர்வமான அரசாங்கத்தை ஸ்தாபித்து பிரேரணை முன்வைக்குமாறு  ரணில் தெரிவிப்பு 

by Staff Writer 04-12-2018 | 5:26 PM
Colombo (News 1st) தேர்தல் அவசியம் எனின் சட்டப்பூர்வமான அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச சட்டரீதியான தேர்தலையே அங்கீகரிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்கமைய, அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்டப்பூர்வமான அரசாங்கத்தினூடாக பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட அனைவரும் ஜனநாயக நடவடிக்கைகளையே விரும்புவதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் என பதாதைகளை ஏந்தி நிற்பவர்கள் என அனைவரும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.