நீதிமன்ற தடையுத்தரவுடன் இணங்கமுடியாது - மஹிந்த

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவுடன் இணங்கமுடியாது - மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 03-12-2018 | 8:11 PM
Colombo (Nws 1st) அமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவுடன் தம்மால் இணங்கமுடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக நாளை உயர்நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பமாகும் முதல் மணித்தியாலத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தொடர்பிலான பொருட்கோடல் வழங்குவது மற்றும் அது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் மீயுயர் அதிகாரம் அரசியலமைப்பிற்கமைய உயர்நீதிமன்றத்திற்கே உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம், பொதுத் தேர்தலூடாக மக்களின் கருத்தினை கேட்டறிவதற்கான திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரதும் அரப்பணிப்பு அவசியம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்நாடு மீதான பற்று, நீதித்துறை மீதான மதிப்பு, தேசப்பற்று, நேர்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்தத் தீர்க்கமான தருணத்தில் அமைதியாகவும் தைரியமாகவும் பொறுப்புடனும் நாட்டிற்காக கடமைகளை நிறைவேற்றுமாறு மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.