ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

விமான நிறுவன முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

by Staff Writer 01-12-2018 | 3:43 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும், இதன் பதவிக்காலம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா நிறுவனங்களில் 2006 ஜனவரி முதலாம் திகதி முதல் 2018 ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.