வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை: 48 வயதான நபர் கைது

by Bella Dalima 01-12-2018 | 3:31 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் 48 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கிளிநொச்சி - வட்டகச்சி பகுதியில் வைத்து இராசநாயகம் சர்வானந்தம் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் சந்தேகநபரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களினதும் தலைகளில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கணேஷ் தினேஷ்  எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் தலையில் இரண்டு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நிரோஷன் இந்திக்க எனும் சிங்கள உத்தியோகஸ்தரின் தலையில் ஒரு தடவை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெட்டுக் காயங்களும் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (30) மாலை நிறைவடைந்த பிரேதப் பரிசோதனையினூடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.