by Bella Dalima 29-11-2018 | 3:23 PM
நடிகை ரியாமிகா மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வௌியாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ரியாமிகா (26) ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் அவரது தம்பி பிரகாஷ் தங்கியுள்ளார்.
நேற்று (28) காலை நீண்டநேரம் ஆகியும் ரியாமிகா, அவரது அறையில் இருந்து வெளியே வரவில்லை. பிரகாஷ், ரியாமிகாவின் காதலன் தினேஷ் ஆகியோர் அறையின் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. செல்ஃபோனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து, அந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது ரியாமிகா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி வளசரவாக்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ரியாமிகாவுக்கு சரியாக பட வாய்ப்புகள் இல்லை, வருமானமும் இல்லை, காதலனுடன் தகராறு என மன உளைச்சலில் இருந்து வந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ரியாமிகாவின் செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை முழுவதும் முடிந்த பிறகுதான் நடிகை ரியாமிகாவின் தற்கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.