சீனாவில் இரசாயனத் தொழிற்சாலை அருகில் வெடிப்பு

சீனாவில் இரசாயனத் தொழிற்சாலை அருகில் வெடிப்பு: 22 பேர் பலி, 22 பேர் காயம்

by Bella Dalima 28-11-2018 | 5:59 PM
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜாங்ஜியாகௌவில் உள்ள இரசாயன ஆலைக்காக இரசாயனங்களை ஏற்றிச்சென்றிருந்த வாகனம், ஆலைக்கு வௌியில் வெடித்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆலைக்கு வெளியே எரிந்த கார்களும் டிரக்குகளும் காணப்படுகின்றன. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஜாங்ஜியாகௌ நகரம் பெய்ஜிங்கின் வடமேற்கு பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 38 டிரக்குகள் மற்றும் 12 வாகனங்கள் தீயில் சேதமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளும், விபத்தின் காரணத்தை அறிவதற்கான புலனாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டு சீனா நடத்தவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சில போட்டிகளை ஜாங்ஜியாகௌவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.