கடற்றொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

கடற்றொழிலில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவது தொடர்பில் பிரதமர் ஆலோசனை

by Staff Writer 28-11-2018 | 7:18 AM
Colombo (News 1st) கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். மீனவ சங்கங்கள் உள்ளிட்ட கடற்றொழில் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உற்பத்தி செலவு அதிகரிக்கின்றமை , மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் படகுகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீன்பிடி படகுகள் நிர்மாணத்துக்கு தேவையான பைபர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதியின் போது தீர்வை வரிச் சலுகைகளை வழங்குமாறு இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, மீனவ சம்மேளனங்களுக்கு குளிர்சாதன வசதிகளையும் விரைவில் நவீனமயப்படுத்தி வழங்குமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்களை இறக்குமதி தீர்வை வரியிலிருந்து விடுவித்து ஐஸ் கட்டிகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை முன்வைத்துள்ளார். அத்துடன், மீனவர்களுக்கான காப்புறுதி முறைமையொன்றை உருவாக்குவதுடன் தலா 2 படகுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகலம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.