தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட 30 இந்தியர்கள் மாத்தளையில் நிர்க்கதி

by Staff Writer 28-11-2018 | 4:18 PM
Colombo (News 1st) இலங்கைக்கு தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட இந்தியப் பிரஜைகள் சிலர் தம்மை மீண்டும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துவரப்பட்ட சுமார் 30 பேர் கலேவெல - கட்டுபொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், தமக்கு கடந்த மூன்று மாதங்களாக உரிய முறையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இன்றி கலேவெல பகுதியில் தங்கியுள்ள குறித்த இந்தியப் பிரஜைகள் தம்மை இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு மாத்தளை கலேவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கலேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தங்குமிடவசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமது தொழில் வழங்குநர் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என தெரிவித்து குறித்த இந்தியப் பிரஜைகள் முறையிட்டுள்ளதாக கலேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். இலங்கை மின்சார சபைக்கான உயர் கோபுரங்களை அமைக்கும் இந்திய நிறுவனம் ஒன்றினால் இவர்கள் தொழிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். இந்திய தொழிலாளர்களின் கோரிக்கைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என கூறப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் இணங்கவில்லை எனவும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தொழில் வழங்குநர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.