by Staff Writer 28-11-2018 | 9:32 AM
Colombo (News 1st) பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருவதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே அவர் மன்றில் சரணடைந்தார்.
2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் இளைஞர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாவதற்கு அப்போதைய கடற்படைத் தளபதியாக இருந்த ரவீந்திர விஜேகுணரத்ன உதவி புரிந்ததாக ஏற்கனவே மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதற்கமைய, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.