பிரதீப் காரியவசத்திற்கு சிறைத்தண்டனை, அபராதம்

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

by Staff Writer 26-11-2018 | 4:53 PM
Colombo (News 1st) தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நட்டம் ஏற்படும் என்பதை அறிந்துகொண்டே தேசிய சேமிப்பு வங்கியின் பணத்தைப் பயன்படுத்தி 'த பினேன்ஸ்' நிறுவனத்தின் 78 இலட்சம் ரூபா பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்தமை உள்ளிட்ட அவருக்கு எதிரான 4 குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன. இதற்கமைய, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்கவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக பிரதீப் காரியவசத்திற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.