வடக்கில் 1,300 ஹெக்டேயர் காணிகள் படையினர் வசம்

வடக்கு, கிழக்கில் 1300 ஹெக்டேயர் காணிகள் படையினர் வசம்

by Staff Writer 25-11-2018 | 5:10 PM
Colombo (News 1st) வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் பொதுமக்கள் காணிகள் மேலும் 1,300 ஹெக்டேயர் படையினர் வசமுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி மாதம் முதல் இதுவரையான 3 வருட காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 19,000 ஹெக்டேயருக்கும் அதிக தனியார் காணிகள் இதுவரை உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் குறித்த காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த ஆய்வுகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளுக்கு இணங்க, 95 வீதமான காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதுடன், 5 வீதமான காணிகளே விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. பலாலி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேப்பாபுலவு, மயிலிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காணிகள் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் பிரிவினர் வசமுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.