பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணை

பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை

by Staff Writer 25-11-2018 | 2:41 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையுடன் தொடர்புடையவர்களை விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்தச் சம்பவம் குறித்து இதுவரை 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 4 முறைப்பாடுகள் வெலிகட பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடும் பொலிஸ்மா அதிபரினால் வெலிக்கடை பொலிஸாருக்கு அனுப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், இந்திக அனுருத்த, ஆஷூ மாரசிங்க மற்றும் விமல் கீகனகே ஆகியோரால் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, குழப்பநிலை காரணமாக பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.