வசீம் கொலை: குற்றப்பத்திரிக்கை தாக்கல்

வசீம் தாஜுதீன் கொலை: சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

by Staff Writer 24-11-2018 | 9:23 PM
Colombo (News 1st) ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக Ceylon Today பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வழக்கு விசாரணையின் போது வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின், முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க ஆகியோர் இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 198 மற்றும் 215 ஆம் சரத்தின் கீழ் குற்றமிழைத்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்ட மா அதிபர் அனுப்பியுள்ள வழக்கு தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் 198 சரத்தின் கீழ் கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் தவறிழைத்துள்ளதாக குறித்த அறிக்கையில் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.