தமிழ் மக்களுக்கு தமது முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு உண்டு: சி.வி.விக்னேஷ்வரன்

by Staff Writer 23-11-2018 | 7:01 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏனைய சிறுபான்மையோர் போலல்லாது தமது முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரு கடப்பாடு உண்டு என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்திற்கொரு கேள்விக்கு வழங்கிய பதிலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்புத் தமிழர்களுக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் மலையகத் தமிழ் சொந்தங்களுக்கும் முக்கியமாகத் தேவைப்படுவது பொருளாதார அபிவிருத்தியே என்பதுடன், வட - கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வே முக்கியம் எனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துமே தவிர, அரசியல் ரீதியாக தொடர்ந்தும் இரண்டாந்தரக் குடிமக்களாகவே வாழ இடமளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு முற்றுப் புள்ளியிடாமல், பொருளாதார அபிவிருத்தியே முக்கியம் எனவும் அதனுள் முழுமையாக நுழைந்து விடும் பட்சத்தில் தெற்கின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த முடியாமற்போய்விடும் எனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினருடன் தனக்குப் பகை ஏதும் இல்லை என்ற நிலையிலும், அவர்களின் கோரிக்கைகளுக்கு இடமளித்தால் வனாந்தரத்தில் மனிதன் படுக்கும் கூடாரத்தினுள் ஒட்டகத்தை உள்நுழைய விட்ட கதையாகிவிடும் எனவும் காலக்கிரமத்தில் ஒட்டகம் உள்நுழைய மனிதன் வெளியே அப்புறப்படுத்தப்பட்டு விடுவான் எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் தமது போர்க்கடமைகள் முடிவுற்றதும் அவர்களின் தலைமையகப் பாசறைகளுக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு திரும்பாது 10 வருடங்களாக தரித்து நிற்பது தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார விருத்தியே முக்கியம் என்ற எதிர்பார்ப்பில் இன்று தென்னவர்களின் ஊடுருவல் பொருளாதார ரீதியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களுள் பலர் வியாபாரிகள் என்பதுடன், தமிழ் மக்களின் வளங்களைச் சூறையாடி விற்று வளம் பெறுதலே அவர்களின் நோக்கமெனவும் வடமாகாண முன்னாள் முதல்வரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேரடியாக புலம்பெயர் தமிழ் மக்கள் மாகாண சபைகளுடன் சேர்ந்து முதலீடு செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை எனவும் அதனால்த்தான் முதலமைச்சர் நிதியத்தை ஐந்து வருடகாலமாக மத்திய அரசாங்கங்கள் முடக்கி வைத்துள்ளன எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.