வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் விவசாயிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் விவசாயிகள்: வங்கிக் கடனை திருப்பி செலுத்துவது எவ்வாறு? 

by Staff Writer 22-11-2018 | 6:59 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர். முந்தல் மற்றும் கல்பிட்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட கத்தரி, பயிற்றங்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட பல விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இந்த வருடத்தில் புத்தளம் மாவட்டத்தில் இரண்டு தடவைகள் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயத்திற்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, தங்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.