by Staff Writer 22-11-2018 | 9:23 AM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய, நேற்று முதல் அமுலாகும் வகையில் அவர் மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் மற்றும் சந்தேநகபர்கள் உள்ளிட்ட 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நியோமால் ரங்கஜீவ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ரங்கஜீவ தாக்கல் செய்திருந்த பிணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியாக இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டது.
தம்மை மீண்டும் சேவையில் அமர்த்துமாறு கடந்த 19ஆம் திகதி பொலிஸ்மா அதிபரின் நிவாரணப் பணிமனையில் நியோமால் ரங்கஜீவ மேன்முறையீடு செய்திருந்தார்.
அந்த மேன்முறையீட்டை விசாரணை செய்த பொலிஸ்மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.