புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-11-2018 | 5:52 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்காக தாம் 7 உறுப்பினர்களைப் பெயரிட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். 02. வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை இடைக்கால கணக்கறிக்கையைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 03. இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கலாநிதி நாலக்க கொடஹேவாவே நியமிக்கப்பட்டுள்ளார். 04. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 05. அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவித்த வசந்த சேனாநாயக்க, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். 06. ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, ஜனாதிபதியிடம் இன்று மகஜரொன்றை கையளிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவுகளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார். 02. ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத் திட்டங்களுக்கு அதிகசெலவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) இராஜினாமா செய்துள்ளார். 03. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான தனுஷ்க குணதிலக்க பெயரிடப்பட்டுள்ளார்.