தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் சிக்கல்

பாராளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களை பெயரிடுவதில் சிக்கல்

by Staff Writer 22-11-2018 | 6:54 AM
Colombo (News 1st) பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்களைப் பெயரிடுவதில் தற்போது இழுபறிநிலை நிலவுகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சபாநாயகரே தெரிவுக் குழுவின் தலமைப்பொறுப்பை வகிக்கிறார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 12பேர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும். தாம் ஆளுங்கட்சி என்பதுடன், பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமக்கே பெரும்பான்மை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இதனால், இரு தரப்பிற்கு இடையிலும் இது குறித்தி கருத்துமுரண்பாடு தொடர்வதுடன், தெரிவுக்குழுவை நியமிப்பதிலும் இழுபறி நிலை காணப்படுகின்றது. பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்காக ஆளுங்கட்சி சார்பில் பெயரிடப்பட்டுள்ள 7 உறுப்பினர்களின் பெயர்களை, சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு நேற்று அனுப்பியுள்ளார். தினேஷ் குணவர்தன, எஸ்.பி. திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச, திலங்க சுமதிபால, உதய கம்மன்பில ஆகியோரது பெயர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பெயர்ப் பட்டியலுடன் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபாநாயகருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். தெரிவுக்குழுவில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவிற்கு 12பேருக்கும் அதிகமானோர் நியமிக்கப்பட வேண்டுமாயின் அது குறித்து தமக்கு அறிவிக்குமாறும், அதற்காக தெரிவுக்குழுவிற்கு பெயரிடப்படாத ஆளுங்கட்சி உறுப்பினர்களை பெயரிடுவதவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் தினேஷ் குணவத்ன இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி தமது பிரதிநிதிகளாக, விஜித ஹேரத் மற்றும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரை தெரிவுக் குழுவிற்காக பெயரிட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கான தமது உறுப்பினர்களின் பெயர்களை நாளைய தினம் வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. தெரிவுக்குழுவில் தமது கட்சிக்கு 7 பேருக்கு இடமளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாளைய பாராளுமன்ற அமர்வை சிக்கலின்றி முன்னெடுப்பதற்கு தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்தநிலையில், நாளைய பாராளுமன்ற அமர்வின்போதும், பொதுமக்கள் கலரி மற்றும் சபாநாயகரின் விசேட அதிதிகள் கலரி ஆகியன மூடப்படவுள்ளன.