சீருடை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

by Staff Writer 22-11-2018 | 7:04 AM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் முறைக்கு பதிலாக மீண்டும் சீருடைத் துணியைப் பெற்றுக்கொடுப்பதாக, கல்வி அமைச்சு குறிப்பிட்டிருந்த போதிலும் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்குவது தொடர்பிலான எவ்வித ஒப்பந்தங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். நாம் இது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்னவிடம் வினவியபோது, பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்தத் தவணை முடிவடைவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொடுக்க முடியுமா என கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, அதற்கு அவர் பதில் வழங்கவில்லை.