சந்தேகநபர் தப்பியோட்டம்: விசாரணைகள் ஆரம்பம்

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 22-11-2018 | 3:55 PM
Colombo (News 1st) கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் தப்பியோடியமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சந்தேகநபரை கேகாலை சிறைச்சாலையிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்குக் கொண்டு சென்று, அதன் பின்னர் களுத்துறை சிறைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. இதற்கிடையில், அந்த கைதி தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உப்புல்தெனிய தெரிவித்தார். எனினும், கைதி எந்த இடத்திலிருந்து தப்பியோடினார் என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வௌியாகவில்லை. கைதி தப்பியோடிய சம்பவம் கடந்த 7 ஆம் திகதி பதிவான போதிலும், அது 10 ஆம் திகதியே தெரியவந்தது. சிறைச்சாலை அதிகாரிகள் இதனுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகளின்போது அதிகக் கவனம் செலுத்தப்படும் என துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார். சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரொருவரின் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 10 வழக்குகளுடன் தொடர்புடைய சுனில் ஷாந்த என்ற சந்தேகநபரே தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.