ஹெரோயின் வர்த்தகத்தில் பேத்தியை ஈடுபடுத்திய பாட்டி

ஹெரோயின் வர்த்தகத்தில் 6 வயது பேத்தியை ஈடுபடுத்திய பாட்டி கைது

by Staff Writer 21-11-2018 | 1:01 PM
Colombo (News 1st) அம்பலாங்கொடை கடற்கரை பகுதியில், தனது 6 வயது பேத்தியை ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய பாட்டி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 4 கிராம் 365 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் ஆடைக்குள் மறைத்துவைத்து ஹெரோயின் கடத்துவதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர். அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை, மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் மகன் ஒருவர் 1300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைக் கைது செய்வது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், அவர்கள் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான இருவரிடமிருந்து 2700 போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேநிலையில், மீன் விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவருடன் மேலும் ஒரு தம்பதியினரும் மினுவாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான 8 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, குளியாப்பிட்டிய பகுதியில் இன்னொரு தம்பதியினர் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.