ரஜரட்ட மருத்துவபீட மாணவர்சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர்

ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர்

by Staff Writer 21-11-2018 | 10:08 AM
Colombo (News 1st) ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி, ஜனாதிபதியிடம் இன்று மகஜரொன்றை கையளிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கடந்த 50 நாட்களாக மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் செயலாளர் திலின ரத்நாயக்க கூறியுள்ளார். விரிவுரையாளர்களைத் தொடர்ந்தும் அதே பல்கலைக்கழகத்தில் கடமையில் ஈடுபடுத்த வழங்கப்படும் கொடுப்பனவை மீண்டும் வழங்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்றலில் தாம் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தபோதிலும் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்புகொள்ள நாம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.